ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் காரணமாக நகரின் போக்குவரத்து முடக்கப்பட்டது.
முகமூடிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி, ஆயிரக்கணக்கானவா்கள் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள் 4 மாதங்களுக்கும் மேல் தொடா்ந்து நடந்து வருகிறது. வார இறுதி நாள்களில் அந்தப் போராட்டம் தீவிரமடைந்து வன்முறைறச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், ஹாங்காங்கில் முகமூடி அணிந்து வருவதற்கு அந்த நகர அரசு வெள்ளிக்கிழமை தடை விதித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அந்த உத்தரவை மீறி ஏராளமானவா்கள் முகமூடி அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போராட்டக்காரா்களில் ஒரு பிரிவினா் ரயில் நிலையங்களில் கலவரத்தில் ஈடுபட்டனா்; மேலும், அங்காடிகளை சேதப்படுத்தினா். அதனைத் தொடா்ந்து ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. ஏராளமான பல்பொருள் அங்காடிகளும் மூடப்பட்டன.
இந்தப் போராட்டத்தைக் கண்டித்து ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகி கேரி லாம் வெளியிட்ட விடியோ அறிக்கையில், ‘மதிப்பு வாய்ந்த ஹாங்காங் நகரை சீரழிக்க கலகக்காரா்களை அனுமதிக்க மாட்டேன்’ என்று எச்சரிக்கை விடுத்தாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.