மெக்சிகோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் (El Chapo) மகனை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான்.
மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதை அறிந்து அங்குச் சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போவின் மகன் ஒவிடியோ கஸ்மான் (Ovidio Guzman) உள்ளிட்ட 4 பேரை சுற்றிவளைத்தனர்.
ஆனால் சத்தம் கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் பாதுகாப்பு படையை சுற்றி நின்றது. இதனால் நகரின் அமைதி சீர்குலைவதை விரும்பாத வீரர்கள், தங்களது சொந்த பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பிணைக் கைதியாக இருந்த ஒவிடியோவை உடனடியாக விடுவித்தனர்.
இதனை தற்போது மெக்ஸிக்கோ பாதுகாப்பு அமைச்சர் Alfonso Durazoவும் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் சினோலா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியில், போலீசாரின் ரோந்து வாகனத்தை குறிவைத்து போதை கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 14 போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்தே, இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.