ஹம்பர்க்: இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் (Hochbunker) என்ற இடத்தை பதுங்கு குழியாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.
ஃப்ளாக்டர்ம்-4 (Flakturm IV) என்று பெயரிடப்பட்ட இந்த பதுங்குகுழி அதன் பின்னர் தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது.
136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 100 யூரோக்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொங்கும் தோட்டம், 5 பிரமிட் வடிவ கட்டிடங்கள் இங்கு வரவுள்ளதாம்.
இந்த ஹோட்டல் 2021ம் ஆண்டு திறக்கப்பட உள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.