பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் 2-ஆவது முறையாக கல்வீசி வன்முறையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பின் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாகிஸ்தானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்பது போன்ற வீர வசனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் 2-ஆவது முறையாக செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடிகளுடன், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
மேலும் இந்திய தூதரகத்தின் மீது முட்டை மற்றும் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் இந்திய தூதரக அலுவலகம் சேதமடைந்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிட்டன் இந்திய தூதரகம் சுதந்திர தினத்தை கொண்டாடிய போது, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இதேபோன்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.