சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அறிவிப்பை நிறுத்திவைத்தார் டிரம்ப்

சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 நாள்களுக்கு நிறுத்திவைத்தார்.
சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அறிவிப்பை நிறுத்திவைத்தார் டிரம்ப்


சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 நாள்களுக்கு நிறுத்திவைத்தார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அக்டோபர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து, 25,000 கோடி டாலர் (சுமார் ரூ.17.77 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டிருந்தேன்.
எனினும், அந்த திட்டத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.
சீன துணைப் பிரதமர் லியூ ஹீ-யின் வேண்டுகோளை ஏற்றும், சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழா அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுவதைக் கருத்தில் கொண்டும், நல்லெண்ண நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களைவிட, அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு மிகக் குறைவாக உள்ளதால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று சீனாவிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
அதற்காக, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளார்.
அதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்துள்ளது.
இதனால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
எனினும், முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கடல் உணவுப் பொருள்கள், புற்றுநோய் மருந்துகள், கால்நடைத் தீவனம், மீன் தீவனம், கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை சாதனங்கள் உள்ளிட்ட 16 வகைப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா புதன்கிழமை அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, 25,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் தற்போது நிறுத்திவைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com