கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாதத்துக்கு தொடர்புடைய 26 பில்லியன் பதிவுகளை அகற்றியுள்ளதாக சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அல் கய்தா, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடைய அல்லது பயங்கரவாதத்தை பரப்பக்கூடிய 26 பில்லியன் பதிவுகளை எந்தவித குற்றச்சாட்டுகளும் தெரிவிப்பதற்கு முன்பு அகற்றப்பட்டுள்ளது. 200 வெள்ளை இன மேலாதிக்கவாதி அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (தானியங்கி மென்பொருள்) உதவியுடன் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய நிலைப்பாடு மற்றும் கொள்கை முடிவுகள் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மைக்ரோஸாஃப்ட், ட்விட்டர், கூகுள் மற்றும் அமேஸான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 9 முக்கிய திட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
குறிப்பிட்ட பதிவுகள் நீக்கப்பட்டு, பக்கங்கள் முடக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு பெயர்களில் அவை மீண்டும் உருவாக்கப்படுகின்றன. எனவே இதில் போதிய திட்டங்களை வகுத்து முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.