இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஜெர்மனி நாட்டின் கடவுச்சீட்டைக் கொண்டு பயணித்ததால், அமெரிக்காவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக, அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள டல்லேஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் வழக்கமான சோதனைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிலிருந்து வந்த ஒரு பயணியின் கடவுச்சீட்டை அவர்கள் பரிசோதித்தனர். அந்தக் கடவுச்சீட்டு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
கடவுச்சீட்டில் இடம்பெற்றிருந்த தகவல்களும், அந்த நபரின் அடையாளங்களும் முரண்பட்டு இருந்தன. இதையடுத்து, கடவுச்சீட்டின் எலக்ட்ரானிக் சிப் மூலம் அந்த நபர் தொடர்பான விவரங்களைப் பெற அதிகாரிகள் முயன்றனர். இருந்தபோதிலும், அதைத் தொடர்புகொள்ள அவர்களால் இயலவில்லை.
இதையடுத்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தாம் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதையும், கானா நாட்டில் அந்தக் கடவுச்சீட்டை வாங்கியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.