அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 முதல் 29-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஐ.நா. பொதுச் சபையில் மோடி உரையாற்றவுள்ளார். ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் வரும் 22-ஆம் தேதி நடத்தும் மோடி நலமா? நிகழ்ச்சியில் மோடி உரையாற்றவுள்ளார். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்.
இந்நிலையில், மோடி நலமா நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு மன்னிக்க வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
அனைவருக்கும் வணக்கம்! அமெரிக்கா வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை உளமாற வரவேற்கிறேன். நான் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்கூட்டிய திட்டமிட்டிருந்ததால், மோடி நலமா நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்க காங்கிரஸார் பங்கேற்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. அதேபோன்று ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும் விளங்குகிறது. எனவே பொருளாதாரம், அணு உற்பத்தி மற்றும் பயன்பாடு கட்டுப்பாடு, புவி வெப்பமயமாதல், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது மிக அவசியமாகும் என்று தெரிவித்தார்.