இந்தோனேஷியாவின் கிழக்கே அமைந்துள்ள ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 2.06 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், டுபான் நகருக்கு 56 கி.மீ. தொலைவில், கடலுக்குள் 656 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, 6.0 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, முந்தைய நிலநடுக்கத்தின் பின்னதிர்வாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.