சீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் கௌரவ விருது வழங்கும் விழா செப்டம்பர் 29ஆம் நாள் நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 42 பிரமுகர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், குடியரசு பதக்கம், நட்புறவு பதக்கம் மற்றும் கௌரவப் பட்டத்துக்கான பதக்கங்களை வழங்கினார்.
ஆண்களும் பெண்களும் சமமான ஊதியம் பெற வேண்டும் என்பதை முன்மொழிந்து, அதனைச் சீன அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதை முன்னேற்றிய கிராமப்புற முன்மாதிரி தொழிலாளர் ஷென் ஜிலான், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனத் தானியப் பாதுகாப்பு மற்றும் உலக தானிய வினியோகத்துக்கு பெரும் பங்காற்றி வரும் சீனாவின் கலப்பின நெல் தந்தை எனப் போற்றப்படும் யுவான் லோங்பிங், கடந்த 60 ஆண்டுகளாக தொழில் நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்கவனம் செலுத்தி அமைதியாகப் பணிபுரிந்து வரும் சீனாவின் முதல் தலைமுறை அணு சக்தி நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பாளர் ஹுவங் சுஹுவா உள்ளிட்டோர், பதக்கங்களைப் பெற்ற 36 சீனர்களில் இடம்பெற்றுள்ளனர்.
தத்தமது பதவியில் பாடுபட்டு வரும் அவர்கள், சீனத் தேசத்தின் போராட்ட எழுச்சியை எடுத்துக்கூறியுள்ளனர். மேலும், சாதாரண மக்கள் எவராலும் அசாதாரண வாழ்க்கையை நடத்த முடியும் என்பதையும், சாதாரண பணி எல்லாவற்றிலும் அசாதாரண சாதனைகளைப் படைக்க முடியும் என்பதையும் அவர்கள் செயல்களின் மூலம் நிரூபித்துள்ளனர்.
கியூபா, தாய்லாந்து, தான்சானியா, ரஷியா, பிரான்சு, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த6 வெளிநாட்டு நண்பர்கள் சீனாவின் வெளியுறவுக்கான அதியுயர் பதக்கங்களைப் பெற்றிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நட்புறவு பதக்கங்களைப் பெற்ற அவர்கள் நீண்டகாலமாக சீனாவுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிக்கு உளமார்ந்த நன்றியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அதோடு, சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பணியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு