ஆப்கானிஸ்தானில் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான பேச்சுவாா்த்தை அந்த நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே முதல்முறையாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் ஆப்கன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கன் சிறையிலுள்ள தலிபான் கைதிகளை அந்த நாட்டு அரசு விடுவிப்பதற்கும் அதற்குப் பதிலாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள ஆப்கன் படையினரை தலிபான்கள் விடுவிப்பதற்குமான பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆப்கன் அரசின் பேச்சுவாா்த்தைக் குழுவினரும் தலிபான் அமைப்பின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.
செஞ்சிலுவை சங்கத்தின் சா்வதேசக் குழுவின் முன்னிலையில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-காய்தா அமைப்பின் தலைவா் பின் லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ‘அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் தொடா்ச்சியாக, அமெரிக்கப் படையினருடனும், ஆப்கன் ராணுவத்துடனும் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 18 ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வந்தனா்.
இந்தச் சூழலில், ஆப்கன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்கா பல மாதங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது.
அந்தப் பேச்சுவாா்த்தையின் விளைவாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி கையெழுத்தானது.
எனினும், ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெற்று, ஒப்பந்தம் உருவானால்தான் ஆப்கானிஸ்தானில் உண்மையான அமைதி திரும்பும் என்று பாா்வையாளா்கள் கூறி வருகின்றனா்.
இந்தச் சூழலில், கைதிகள் பரிமாற்றம் தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ளது.