வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 1,480 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது.
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை கடுமையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மிக அதிகமாக இருந்ததாகவும், பெருந்தொற்று நோய் பரவிய பிறகு நாட்டில் 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவ 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு அதே நேரம் வரை 1,480 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரே நாளில் 7 ஆயிரத்தை எட்டிவிட்டது.
அமெரிக்காவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை ஆறு ஆயிரத்தை தாண்டி, 6,057 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது உலகத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கால் பங்காகும்.
அமெரிக்காவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக இருக்கும் நியூ யார்க்கில் 3,218 பேர் மரணம் அடைந்துள்ளனர். 50 ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை மரணம் அடைய வாய்ப்பிருப்பதாக வெள்ளை மாளிகை தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பில் உலக அளவில் இத்தாலியே வெள்ளிக்கிழமை நிலவரப்படி 14,681 மரணங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் 11 ஆயிரம் மரணங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.