இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதன் 75ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க ஜப்பான் தயாராகி வருகிறது.
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்தது. அப்போது ஜப்பான் நாட்டின் ஹீரோசிமா நகரின் மீது காலை 8 மணி 15 நிமிடத்தில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இந்த அணுகுண்டு வீச்சினால் ஹீரோசிமா நகர் நொடிப் பொழுதில் நாசமாகியது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு நாள்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 9ஆம் தேதி அமெரிக்கா நாகசாகி எனும் நகரத்தின் மீது மீண்டும் அணுகுண்டு வீசியது. இந்த இரண்டாம் குண்டுவீச்சில் 75 ஆயிரம் பொதுமக்கள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சேதம் காரணமாக போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்த ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் இன்றைக்கும் உடல் பாதிப்புகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி, வரும் வியாழக்கிழமையுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதனை அனுசரிக்கும் விதமாக ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அணுகுண்டுவீச்சிற்கு உள்ளான ஹிரோசிமா மற்றும் நாகசாகி பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முந்தைய ஆண்டுகளில், பிரதமர் ஷின்சோ அபே மற்றும் நகர மேயர்கள் நினைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அணுசக்தி இல்லாத உலகத்திற்கான உறுதிமொழிகளை வலியுறுத்தினர். தற்போது கரோனா தொற்றுநோய் காரணமாக நினைவுச்சின்னங்களில் குறிப்பிட்ட அளவிலானவர்களே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.