பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில்113 பேர் பலியானதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் ஹாமத் ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சரின் ஆலோசகர் தெரிவிக்கையில், பலி எண்ணிக்கை 108 ஆக உயர்ந்ததாகக் கூறினார்.
விபத்து பற்றி பெய்ரூட் ஆளுநர் மர்வான் அபாத் தெரிவிக்கையில், இந்த விபத்து காரணமாக 3,00,000 பேர் வீடற்றவர்களாகிவிட்டனர் என்றார். மேலும் பெய்ரூட் நகரின் பாதி கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பிவழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்துக் காட்சிகள் சமூக ஊடகங்களில் உலகளவில் வைரலாகப் பரவின.
2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை சரிவர பராமரிக்காமல் சேமித்து வைத்திருந்ததே வெடிவிபத்துக்குக் காரணம் என்று லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.