லெபனான் வெடி விபத்தில் இருந்து 3 குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியரின் புகைப்படம் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணியளவில் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துச் சிதறியது. மிகுந்த சத்தத்துடன் நடைபெற்ற இந்த விபத்தில் இதுவரை 137 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்த விபத்தின் காணொலிகள் காண்போரைக் கலங்கச் செய்தன.இந்நிலையில் பெய்ரூட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
வெடிவிபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் புதிதாக பிறந்த 3 குழந்தைகளை அரவணைத்திருக்கும் ஒரு செவிலியரின் புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.அவரைச் சுற்றிலும் வெடிவிபத்தால் சிதறிய கண்ணாடித் துண்டுகளும் கட்டிட இடிபாடுகளும் உள்ளன.
மனிதநேயத்துடன் குழந்தையைக் காப்பாற்றிய அந்த செவிலியரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். “நான் எனது 16 ஆண்டுகால பணி அனுபவத்தில் பல்வேறு போர் சூழல்களில் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்ததைப் போன்ற ஒரு உணர்வை வேறு எதுவும் தந்ததில்லை.” என்கிறார் இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர்.