கடலில் மூழ்கும் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவது மோசமடைவதால் மொரீஷியஸ் சுற்றுச்சூழல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன் ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கின.
கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் இறங்கியது. எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது" என்று பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் தனது சுட்டுரைக் கணக்கில் வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தார். எரிபொருள் கசிவு தொடர்பாக பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கசியும் எரிபொருளால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்நாடு கவலை தெரிவித்துள்ளது. மேலும் வான்வழியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் பெரிய அளவிலான நீலக் கடல்கள் கசிவு மூலம் கறுப்பு நிறத்தில் மாறியிருந்ததை பதிவு செய்துள்ளன.
மொரிஷியஸின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கடற்கரையில் இன்னும் பெரிய கசிவு மற்றும் பேரழிவு தரக்கூடிய சேதம் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மொரீஷியஸ் உணவு மற்றும் சுற்றுலாத்துக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது. இது உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.