தைவானில் எந்த வித அறிகுறியும் இல்லாத கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள முதல் நபர் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தைவான் மருத்துவக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
பெற்றோர், மூத்த சகோதரர் உடன் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஜனவரி 22ஆம் தேதி ஹாங்காங் வழியாக இத்தாலி சென்றார். பின்னர் மீண்டும் ஹாங்காங் வழியாக பிப்ரவரி 1ஆம் தேதி தைவான் திரும்பினார். இதில் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருக்கு சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த 20 வயது இளைஞருக்கு இதுபோன்ற எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபோன்று எந்த வித அறிகுறியும் இல்லாமல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான்.
அந்த குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 78 பேரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தைவானில் இதுவரை 152 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.