ஒரு நாட்டின் பிரதமர் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் விதிமுறைகள் என்பது பொதுவானது என்பதையும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த பிரதமர் மோடி இந்தத்தகவலை தெரிவித்தார்.
பிரதமர் மோடி கூறிய அந்த பிரதமர் யார் என்றால், பல்கேரியன் பிரதமர் பொய்கோ போரிஸோவ் ஆகும். ஜூன் 23-ம் தேதி இவர் முகக்கவசம் அணியாமல் தேவாலயத்துக்குச் சென்றதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது. 300 லிவாக்கள் (இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரம்) அபராதமாக விதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே பல்கேரியாவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டங்கள் நடத்தியதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் தலா 3 ஆயிரம் லிவாக்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பல்கேரியாவில் கரோனா தொற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது. எனினும், அங்கு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பல்கேரியாவில் உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.