144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்துப் பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:
மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காய்கறி, மருந்து, மளிகை பொருட்களை வாங்க வரும் மக்கள் கடைகள் முன்பு போடப்பட்டுள்ள கோட்டிற்குள் நின்று பொருட்களை வாங்கவும், கூட்டத்தினை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகிறோம். 144 தடை உத்தரவினை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
எச்சரித்த போலீஸார்:
144 தடை உத்தரவினை மீறும் வகையில் வெளியே சுற்றித்திரிந்த மக்களை போலீஸார் பிடித்து எச்சரித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார்களில் அத்தியாவசியமின்றி வெளியே வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வெளியில் வருபவர்களுக்கு அச்ச உணர்வு வர வேண்டும் என்பதற்காக, போலீஸார் கைகளில் பெரிய தடிகளையும், பிவிசி குழாய்களையும் வைத்துக்கொண்டு எச்சரித்தனர்.