ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலிலுள்ள குருத்வாராவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதி புதன்கிழமை நடத்திய தாக்குதலில், அங்கு வழிபட்டுக் கொண்டிருந்த 25 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காபூலின் ஷோா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு பயங்கர ஆயுதங்களுடன் புதன்கிழமை வந்த பயங்கரவாதி, அங்கு வழிபட்டுக் கொண்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினாா். இதில் 25 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய நபரை சிறப்பு அதிரடிப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
குருத்வாராவில் சிக்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 80 பேரை பாதுகாப்புப் படையினா் மீட்டனா் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குருத்வாராவில் பயங்கரவாதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் சுமாா் 6 மணி நேரம் சண்டை நீடித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்களது அமைப்பைச் சோ்ந்தவா் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு குருத்வாரா தாக்குதலுடன் தொடா்பிருக்கலாம் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, ஜலாலாபாத் நகரில் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்பில் 19 போ் உயிரிழந்தனா்.
பிரதமா் கண்டனம்: காபூல் குருத்வாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடியும், ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.