கனடாவில் 12 வயதேயான சிறுவன் 6.9 கோடி வருடத்திற்கு முந்தைய டைனோசர் ஒன்றின் புதைபடிமத்தை கண்டறிந்துள்ளது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நாதன் ஹ்ருஷ்கின். அகழ்வாய்வில் ஆர்வம் கொண்டவரான இவர் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கனடாவின் பேட்லாண்ட்ஸில் உள்ள ஹார்ஸ்ஷூ கனியன் பகுதியில் தனது அப்பாவுடன் நடைபயணம் மேற்கொண்டபோது டைனோசர் புதைபடிவத்தை அவர் கண்டுபிடித்தார்.
"டைனோசர் புதைபடிம கண்டுபிடிப்பு போன்ற உண்மையான ஒன்றைக் கண்டுபிடிப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது." என்று நாதன் தெரிவித்துள்ளார்.
நாதன் மற்றும் அவரது தந்தை, எலும்பின் படங்களை ராயல் டைரெல் மியூசியம் ஆஃப் பேலியோண்டாலஜிக்கு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து புதைபடிவத்தை அடையாளம் காண ராயல் டைரெல் மியூசியம் புவியியல் நிபுணர்களின் குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியது. அதன் மீதான் ஆய்வின் அடிப்படையில் இது சுமார் 69 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம் டைனோசரின் புதைபடிவ எலும்பு எனத் தெரியவந்துள்ளது.
அதனையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை அந்த இடத்தில் இதுவரை 30 முதல் 50 எலும்புகள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாதன் மற்றும் டியோனின் கண்டுபிடிப்பு டைனோசர் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய இடைவெளியை நிரப்ப உதவும்." என ராயல் டைரெல் அருங்காட்சியகத்தின் டைனோசர் பழங்காலவியல் ஆய்வாளரான பிரான்சுவா தெர்ரியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.