இஸ்ரேலில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முழு பொது முடக்கம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அமலுக்குவந்தன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இஸ்ரேலில் கடந்த சில மாதங்களாக கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டு அரசில் உள்பூசல் நிலவி வந்ததால் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூா் நேரப்படி நள்ளிரவு 2 மணிக்குத் தொடங்கும் இந்தப் பொது முடக்கம், 3 வாரங்களுக்கு நீடிக்கும்.புதிய விதிமுறைகளின்படி, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், யாரும் தங்கள் வீடுகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூத பண்டிகை விடுமுறைகள் தொடங்கும் இந்தக் காலக்கட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.