வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில் 10 கோடியே 40 லட்சம் விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு செயலியாக சீன நிறுவனத்தின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் பயனர்களின் ஆதரவைப் பெற்ற டிக்டாக் செயலி மீது கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறியதாக உலக அளவில் 10 கோடியே 40 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 90.3% விடியோக்கள் எந்தவொரு பார்வைகளையும் பெறுவதற்கு முன்பே நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மற்றும் தேர்தல்கள் தொடர்பான உள்ளடக்கத்தை சரிபார்க்க டிக்டாக் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் உண்மைச் சரிபார்ப்பு திட்டங்களைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.