தலிபான் பேச்சுவார்த்தைக்கான ஆப்கன் குழு தலைவர் பாக். வருகை

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு சார்பிலான குழுவின் தலைவர் அப்துல்லா அப்துல்லா 3 நாள் பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார்.


இஸ்லாமாபாத்: தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு சார்பிலான குழுவின் தலைவர் அப்துல்லா அப்துல்லா 3 நாள் பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார்.  இந்தப் பயணத்தின்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

தலைநகர் இஸ்லாமாபாதுக்கு திங்கள்கிழமை வந்தடைந்த அப்துல்லா அப்துல்லாவை பாகிஸ்தான் அரசு உயரதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

இந்த மூன்று நாள் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதிபர் ஆரிஃப் அல்வி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி மற்றும் பல்வேறு துறை அரசு  உயரதிகாரிகளுடன் அப்துல்லா அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

அப்துல்லா அப்துல்லா தலைமை வகிக்கும் "தேசிய நல்லிணக்கத்திற்கான ஆப்கன் உயர்நிலை கவுன்சில்', தலிபான் பயங்கரவாதிகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை கடந்த 12 - ஆம் தேதி தொடங்கியது. ஆப்கன் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நிலவி வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர இந்தக் குழு முயற்சி செய்து வருகிறது. 

ஆப்கனில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்தே ஆப்கனுடனான பேச்சுவார்த்தையை தலிபான்கள் தொடங்கியுள்ளனர். பயங்கரவாதிகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி அமெரிக்க அரசு ஆப்கனிலிருந்து தனது படைகளை படிப்படியாக விலக்கிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com