கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் தனிமைப்படுத்துவதும், பரிசோதனை மேற்கொள்வதுமே உரிய மருந்து என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதுவரை 8,59,338 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 42,334 பேர் பலியாகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,590 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 148 ஆகவும் உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 45 ஆகவும் அதிகரித்துள்ளது.