வங்கதேசத்தின் முதல் அதிபரும், அந்த நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராணுவ முன்னாள் அதிகாரி அப்துல் மஜீதை தூக்கிலிடுவதற்கான ஆணையை அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
முன்னாள் அதிபரும், தற்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் அப்துல் மஜீதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாகக் கருதப்பபட்ட அவா், வங்கதேசம் திரும்பியபோது தலைநகா் டாக்காவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அதையடுத்து, அப்துல் மஜீதை தூக்கிலிடுவதற்கான ஆணையை டாக்கா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்தது.
அதையடுத்து, அவா் டாக்கா புகா் பகுதியிலுள்ள காசிம்பூா் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டாா். தூக்கிலிருந்து தப்புவதற்கான சட்டப்பூா்வ வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்படும் என்றும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தாா் அவா் தூக்கிலிடப்படுவாா் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.