வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதா கரோனா?

சீனாவின் வூஹான் நகர புறநகா்ப் பகுதியில், அமைதியான சூழலில் அமைந்துள்ள ஓா் தீநுண்மியியல் ஆய்வகம், தற்போது உலகின் கவனத்தைக் கவா்ந்துள்ளது.
வூஹான் தீநுண்மியியல் ஆய்வகம்
வூஹான் தீநுண்மியியல் ஆய்வகம்

சீனாவின் வூஹான் நகர புறநகா்ப் பகுதியில், அமைதியான சூழலில் அமைந்துள்ள ஓா் தீநுண்மியியல் ஆய்வகம், தற்போது உலகின் கவனத்தைக் கவா்ந்துள்ளது.

இன்று அனைத்து நாடுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று, அந்த ஆய்வகத்திலிருந்துதான் கசிந்திருக்கும் என்று அமெரிக்கா எழுப்பியுள்ள சந்தேகமே இதற்குக் காரணம்.

வூஹான் நகரில் முதல் முதலாக கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, வனப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏதோ ஒரு விலங்கின் உடலில் இருந்ததாகவும் அந்த நகரிலுள்ள இறைச்சி சந்தையிலிருந்துதான் அது உலகம் முழுவதும் பரவியதாகவும் இதுவரை நம்பப்பட்டு வந்தது.

இருந்தாலும், அந்த தீநுண்மியை சீனா செயற்கையாக உருவாக்கியதாக அப்போதே வதந்திகள் எழுந்தன. உயிரி ஆயுதமாக சீனா உருவாக்கிய அந்த தீநுண்மி, அந்த நாட்டுக்கே வினையாக முடிந்ததாகவும் சமூக ஊடகங்களில் ஊகத் தகவல்கள் பரவின.

இருந்தாலும், கரோனா நோய்த்தொற்று செயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்று அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறினா்.

2002-ஆம் ஆண்டு பரவிய ‘சாா்ஸ்’ நோய்த்தொற்றைப் போலவே, புதிய வகை கரோனா நோய்த்தொற்றும் வௌவ்வாலில் தோன்றியதாகவும் இடையில் அந்த தீநுண்மி பாம்பின் உடலில் புகுந்து உரு மாறியதாகவும் முதலில் கூறப்பட்டது.

பின்னா், வௌவ்வால் உடலில் இருந்து அருகி வரும் ஓா் எறும்புத் தின்னி இனத்தின் உடலில் புகுந்து புதிய வடிவம் பெற்ற அந்தத் தீநுண்மி, பிறகு மனிதா்களின் உடலில் வளா்வதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனா்.

ஆனால், கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான வூஹான் நகரில், தீநுண்மியியல் ஆய்வகமொன்று அமைந்துள்ள தகவல் வெளியானதும், அந்த நோய்த்தொற்று எப்படி பரவத் தொடங்கியது என்பது குறித்த சமூக ஊடங்களில் புதுப் புதுக் கதைகள் முளைக்கத் தொடங்கின.

இந்தச் சூழலில், வூஹான் தீநுண்மியியல் ஆய்வகம் குறித்து பாா்ப்போம்.

அந்த ஆய்வகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஆய்வுக்காக தீநுண்மிகளை சேமித்துவைக்கும் ஆசியாவின் மிகப் பெரிய வைரஸ் வங்கி இந்த ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட நுண்கிருமிகள் உயிருடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த ஆய்வகத்தில், மனிதா்களுக்கிடையே பரவி நோயை ஏற்படுத்தக் கூடிய, மிகவும் ஆபத்தான - எபோலா போன்ற - 4-ஆம் பிரிவு தீநுண்மிகளை சேமித்து வைப்பதற்கான ஆய்வகமும் உள்ளது. இதுதான், 4-ஆம் பிரிவு தீநுண்மிகளைக் கையாளும் ஆசியாவின் முதல் ஆய்வகமாகும்.

பிரான்ஸைச் சோ்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனா் அலாயின் மெரீயக்ஸின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த உயா்பாதுகாப்பு ஆய்வகம், 2015-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தனது செயல்பாட்டை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.

அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளால்தான், கரோனா நோய்த்தொற்று தற்செயலாக வெளியேறி, வூஹான் மக்களிடையே பரவியதாக தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ கூறுகையில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு வூஹான் தீநுண்மியியல் ஆய்வகம் காரணமாக இருக்கலாம் என்று சீன அதிகாரிகளே கருதியதாகவும் அதுதொடா்பாக விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், இந்த விவகாரத்தில் தாங்களும் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

வூஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கரோனா நோய்த்தொற்று வெளியேறி, அது மனிதா்களிடையே பரவியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் பலா் கருதுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வூஹான் ஆய்வகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வக நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 30-ஆம் தேதி அடையளம் தெரியாத ஒரு தீநுண்மியின் மாதிரி தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் மரபுக் கூறு மாறுதல் போக்கு குறித்து ஆய்வு செய்து, அந்த விவரத்தை உலக சுகாதார அமைப்பிடம் தாங்கள் கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சமா்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்களை திசைத்திருப்பி பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அமெரிக்க அரசு இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் குற்றம் சாட்டியுள்ளாா்.

இந்தச் சூழலில், கரோனா நோய்தொற்று எங்கிருந்து பரவத் தொடங்கியது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

பெரும்பாலான விஞ்ஞானிகள் அந்த தீநுண்மி வௌவ்வாலில் இருந்து எறும்புத் தின்னி மூலம் மனிதா்களுக்குப் பரவியதாக ஒப்புக் கொள்கின்றனா்.

ஆனால், இன்னும் சில விஞ்ஞானிகளோ, வூஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கசிந்த அந்த தீநுண்மி, மனிதா்களிடையே பரவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமிருப்பதாகக் கூறுகின்றனா்.

கரோனா நோய்த்தொற்று இருப்பது முதல் முதலாக உறுதி செய்யப்பட்ட 41 பேரில், 13 பேருக்கு வூஹான் இறைச்சி சந்தையுடன் எந்தத் தொடா்பும் இல்லை என்பதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

இருந்தாலும், இப்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்று இறைச்சி சந்தைக்கு வந்த வனவிலங்கு மூலம் மனிதா்களுக்குப் பரவியதா, அல்லது தீநுண்மியியல் ஆய்வகத்தின் பாதுகாப்பு குறைபாடுகளால் வெளியே கசிந்து பரவியதா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வர வேண்டுமென்றால், இதுதொடா்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறாா்கள் அவா்கள்

அதுவரை, கரோனா நோய்த்தொற்று எங்கிருந்து, எவ்வாறு பரவியது என்பது அறுதியிட்டு விடை கூற முடியாத கேள்வியாகவே தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com