உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வவேற்பை பெற்ற டிக் டாக் செயலிக்கு இந்தியா தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மேலும் சில நாடுகளும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
டிக் டாக் செயலி வெறும் பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர்களின் பல்வேறு திறமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் மேடையாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டிக்டாக்கை 2.6 கோடி மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதில் 60% பேர் அமெரிக்காவைச் சேர்ந்த 16 முதல் 24 வயதுடையோர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் டிக் டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுவதால் இதை பயன்படுத்தி வந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிக்டாக்கின் தலைமையகம் சீனாவில் இருப்பதால் தானே இந்த பிரச்சனை. எனவே அதை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகளவில் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவின் டிக்டாக் உரிமத்தைப் பெறாத பட்சத்தில் டிக்டாக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. ஆயினும் இந்த முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை ஏனெனில் பயனாளர்களின் தரவைப் பாதுகாப்பதிலும், தளத்தின் நடுநிலை மற்றும் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதிலும் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று பைட் டான்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாங் யிமிங் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இந்த யுத்தமும் ஒரு அரசியல் காய் நகர்த்தலை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. டிக்டாக் என்பது விடியோ பகிர்வுக்கான சமூக வலைப்பின்னல் சேவையாகும், இதில் பெரும்பான்மையான இளைஞர்கள் இருப்பதால் அது நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மாற்றக்கூடிய வலிமை மிக்கது. விரைவில் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அதிகார மாற்றத்திற்கான ஒரு காரணியாக டிக்டாக் இருந்துவிட கூடாது என்று கருதியே இதையும் அரசியல் ஆக்குகின்றனர்.
வேறு ஒரு கோணத்தில் யோசித்தால் இது புரியும். விடியோ பகிர்வுக்கான சீனாவின் ஒரு செயலி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று கூறுவது வியப்புக்குரியதாக உள்ளது. உண்மையில் இது அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளின் உலகளாவிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிடுவதாகும்.
டிக்டாக் விடயத்தில் இருக்கும் இன்னொரு அரசியல் சூட்சமம் என்னவென்றால் உலகளாவிய சமூக ஊடங்களின் 5 கண்களாக விளங்கும் அமெரிக்கா ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சமூக ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதன் மூலம் முழு உலகையும் கட்டுப்படுத்த முனைவது தான்.
இதற்காக சிலிக்கான் வேலியிலிருந்து தகவல்களை பெற்று PRISM மற்றும் ECHELON திட்டங்கள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகளான மற்ற நான்கு கண்களுக்கு வழங்குவது இதன் விளைவாக .யு.எஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் உலகளாவிய சமூக ஊடகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்து முடியும்.
அமெரிக்கா தங்கள் சொந்த குடிமக்களின் தரவுகளை அணுக முடியாமல், அது அவர்களின் அரசியல் அதிகார எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்பதால்தான் மைக்ரோசாப்ட் போன்ற ஒரு அமெரிக்க நிறுவனம் டிக்டாக்கை கட்டுப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது.
டிக்டாக் மூலம் பிறநாடுகளின் தரவுகளை சீனா திருடுகிறது என்பதை அமெரிக்காவால் நிரூபிக்க முடியாது. சீனாவின் தொழில்நுட்பங்கள் இயல்பாகவே ஏகபோக வெற்றியை பெற்றுவருவதால் அதன் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறது என்பதுதான் சீனாவின் தன்னம்பிக்கை கூற்றாக உள்ளது.
எது எப்படியோ.. இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எல்லாம் அரசியல் மயமாகிக் கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.