அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் இன்று வழக்கம்போல் செய்தியாளர்களை சந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வந்த பாதுகாப்பு வீரர்கள் ஏதோ காதில் கூறி அவரை அழைத்துச்சென்றனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிமிடங்களுக்கு பிறகு அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அவர் விளக்கமளித்தார். அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்துக்கொண்டிருந்தபோது வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதைக்கண்ட பாதுகாப்பு வீரர்கள் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அந்த நபர் காயமடைந்தததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.