வட கொரியாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாங்கே மாகாணப் பகுதிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் நேரில் பார்வையிட்டு சேத நிலவரங்களை ஆய்வு செய்தார்.
சூறாவளி கடந்துச் சென்ற சில மணி நேரங்களில் அரசு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும், அதிபர் கிம் எப்போது ஆய்வு மேற்கொண்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த ஆய்வுப் பயணத்தின் போது, சூறாவளியால் ஏற்பட்டிருக்கும் சேதம், அச்சப்பட்டதைப்போல மோசமானதாக இல்லை என்றும், சேதத்தைக் கட்டுப்படுத்த தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்ததாகவும் ப்யாங்யாங்கின் அதிகாரப்பூர்வ கொரியன் மத்திய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் தானிய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது வாங்கே மாகாணமாகும். எனவே, இங்கு விவசாயப் பகுதிகளில் சேதத்தைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கிங் ஜாங்-உன் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.