இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்தது. இதனால் தூதரகம் சேதமடைந்த நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். ராக்கெட் ஆயுதங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு தூதரகம் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த சம்பவத்தின் நினைவு தினம் நெருங்கி வருவதால் ஈராக்கில் பதட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டாலும் அதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சமீபத்தில் இராக் தலைநகரில் தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.