கரோனா தொற்று கடைசி நெருக்கடியாக இருக்காது என்றும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு நிச்சயம் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு என்பது கடைசியான பேரிடர் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு தொற்றுநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கெப்ரேயஸ், “கரோனா தொற்று கடைசி தொற்றுநோயாக இருக்காது என்று வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. தொற்றுநோய் மனிதர்கள், விலங்குகள் மற்றும் புவி ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்தார்.
மேலும் “மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ள புவியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் குறித்து கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம்” என அவர் எச்சரித்தார்.
பேரிடர்களைக் கட்டுப்படுத்த பணத்தைப் பயன்படுத்தும் குறுகிய பார்வை மட்டுமே நம்மிடம் உள்ளது என சுட்டிக்காட்டிய அவர் அவை நிரந்தர தீர்வு இல்லை என்றும் தொற்று நோய்களிலுருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் பின் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.