ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரிட்டனில் புதியவகை கரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில், ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கும் பிரிட்டன் அரசு இந்த ஒப்புதல் அளித்துள்ளது.
பிரிட்டனில் கடந்த சில நாள்களாக புதிய வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனிலிருந்து சென்ற மற்ற நாட்டு பயணிகளுக்கும் புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு ஃபைசர் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், புதிய வகை கரோனா அதிகரிப்பதால் தற்போது ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனகா என்ற இரு அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சேமித்து வைக்க முடியும். ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால், குறைந்த விலையில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.