சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை விட வேகமாக ஒரு கேள்வி சீன மக்களிடையே எழுந்து வருகிறது.
அதாவது, சீன அதிபர் ஷி ஜின்பிங் எங்கே இருக்கிறார்? என்பதே அந்தக் கேள்வி.
வூஹானில் பரவி வரும் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சீன அதிபர், அதிகாரத்தில் தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் லீ கெக் யாங்கிடம் ஒப்படைத்துவிட்டார். எனவே அது தொடர்பான பணிகள் அனைத்தையும் லீ கெக் யாங்கே நேரடியாக கண்காணித்து வருகிறார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக சீன அதிபர் ஷி ஜின்பிங் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை, அவர் வழக்கமாக செய்யும் பணிகளையும் செய்யவில்லை என்று ஊடகங்கள் கூறி வருகின்றன.
அதேபோல அந்நாட்டின் செய்தி ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழிலும், நாள்தோறும் பல்வேறு தலைவர்களுடன் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகும்.
அந்த நாளிதழிலும், அவரது பணிகள் குறித்த செய்தியோ, புகைப்படமோ வெளியாவதில்லை.
இவ்வாறு நாடே மிக மோசமான நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, அந்நாட்டு அதிபர் மாயமாகியிருப்பதை மக்கள் கவனிக்காமல் இல்லை. சமூக வலைத்தளங்களில், ஏராளமான சீன மக்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், அது சமூக வலைத்தள சென்சார் அதிகாரிகளால் நீக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கரோனா வைரஸ் பாதிப்பினால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் சீன மக்களுக்கு, அதிபர் மாயமான தகவல் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கரோனா தொற்று பாதிக்கப்படாத வகையில், ஷி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.