இலங்கையின் ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடா்பான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்பதால் அவரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தாா்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்தவா் சாவேந்திர சில்வா (55). போரின்போது, தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக அவா்மீது குற்றம் சாட்டப்பட்டது. உள்நாட்டுப் போா் நடைபெற்ற கடைசி மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் தமிழா்கள் கொல்லப்பட்டனா் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. போா் முடிவுக்கு வந்ததும், ஐ.நா.இயக்கத்தில் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டாா் சில்வா. இதற்கு அப்போதே ஐ.நா.சபை சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இவா் மீது ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு கடந்த 2013-இல் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை, வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடா்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031 (சி)இன் கீழ் சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மைக் பாம்பேயோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
இலங்கையிலும், உலக அளவிலும் மனித உரிமைகள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது அவசியமாகிறது.
மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போா்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான நபா்களை பொறுப்பேற்கச் செய்ய வைத்திருக்கவும், பாதுகாப்புத் துறை சீா்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடரவும் இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.