துபை: துபையில் வசித்து வந்த கேரள இளைஞர், தனது மனைவியைக் காப்பாற்றச் சென்று 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
துபையில் உள்ள உம் அல் குவைன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அனில் நினன் 90% தீக்காயங்களுடன் அபு தாபியில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் அவர் மரணம் அடைந்துவிட்டார். அவரது மனைவி அதே மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் பெற்று வருகிறார். அனிலின் மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது உறவினர் கூறியுள்ளனர்.
இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, நீனு மீது தீப்பற்றியது. அவரைக் காப்பாற்றச் சென்ற நினனும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நினன் மற்றும் நீனு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக நண்பர்கள் கூறியிருந்தனர்.