பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், பலி எண்ணிக்கை நாள்தோறும் மெல்ல குறைந்து வருவது மக்களை ஓரளவுக்கு நிம்மதியடையச் செய்கிறது.
புதன்கிழமை நிலவரப்படி, சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 2,715 ஆக இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் பலியாகியிருப்பதாகவும், கரோனா பரவத் தொடங்கிய பிறகு நேற்றுதான் முதல் முறையாக பலி எண்ணிக்கை 52 என்ற அளவில் குறைந்திருப்பதாகவும், இது ஓரளவுக்கு தொற்றுப் பரவல் குறைவதன் எதிரொலி என்றும் கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் ஹூபேய் மாகாணத்தில் மட்டுமே 52 பேர் பலியாகியிருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக சீனா முழுவதும் புதிதாக 406 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 78,064 ஆக உள்ளது.