2009 உள்நாட்டுப் போரின் போது காணாமல் போன 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
2009-ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச முதல் முறையாக தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்பில் ஐ.நா தூதருடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
மேலும் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இருப்பு குறித்து தெரிவிக்கக் கோரி தொடர் பேரணிகளை நடத்தி வந்தனர்.
பலர் தங்கள் உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று கூறி வந்தனர். ஆனால், இந்தக் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.