லண்டன்: கரோனா காலத்தில் இங்கிலாந்து மதுபான விடுதி ஒன்றில் சமூக இடைவெளிக்காக மின்சார வேலி அமைக்கபட்டுள்ள விநோதம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தில் வெளியாகும் மெட்ரோ செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கார்ன்வால் கவுண்டி பகுதியில் உள்ள ‘தி ஸ்டார் இன்’ என்னும் மதுபான விடுதியின் முன்புறத்தில், சமூக இடைவெளியைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் மதுவை ஆர்டர் செய்யும் பொருட்டு விடுதி ஊழியர்களை நெருங்கி விடாமல் காப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய விடுதி உரிமையாளரான ஜானி மெக்பெடான், ‘மின்சார வேலி சமூக இடைவெளிக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் அதனைக் கடைப்பிடிக்காமல் அவர்கள் விருப்பம் போல நடந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் தற்போது விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ள மின்சார வேலியானது எப்போது வேண்டுமானாலும் ‘ஆன்’ செய்யப்படலாம்’ என்று தெரிவித்தார்.