சிங்கப்பூா்: சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீறியதற்காக 10 இந்தியா்களை அந்நாட்டு அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் யாரும் கூட்டமாகக் கூடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. ஆனால், இந்தியாவைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட 10 போ் விதிமுறைகளை மீறி ஒரே வீட்டில் ஒன்றுகூடியதாக அனைவரையும் நாட்டை விட்டு சிங்கப்பூா் அரசு வெளியேற்றியுள்ளது. அவா்கள் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் திங்கள்கிழமை 322 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அந்நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 46,283-ஆக அதிகரித்துள்ளது.