காபுல்: அரசுப் படைகளுடன் நிகழ்ந்த சண்டையில் ஆப்கனில் 31 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக ஆப்கன் பாதுகாப்புதுறை வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் நங்ரகர் மாகாண செய்தித் தொடர்பாளர் அத்தஹுல்லா கோஹியாணி அளித்துள்ள தகவல்களாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் நங்ரகர் மாகாணம் கோகயாணி மாவட்டத்தில் உள்ள கேல்ஹோ என்ற இடத்தில் அரசுப் படைகளின் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தும் தகவலறிந்து ஆப்கன் தேசிய தற்காப்பு மற்றும் தாக்குதல் படைகள் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்தின. இதில் 31 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 13 பேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மேலும் 15 பேர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பத்து வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், ஐந்து உயர் ரக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு தலிபான்கள் வன்முறையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஆப்கன் தலைவர்கள் வேண்டுகோள்கள் விடுத்து வந்தாலும் தலிபான்கள் அதனை செவிமெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.