கரோனா தடுப்பூசி தயாரானதும் அதனை உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா இந்த முயற்சியில் மும்முரமாக உள்ளது.
கடந்த வாரம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து செயல்படத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன எனத் தெரிவித்திருந்த ட்ரம்ப் 2021 ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவிடும் என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா தடுப்பூசி தயாரிப்பு முடிவடைந்தவுடன் உலக நாடுகளுக்கு அவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பயோடெக்னாலஜி முறையில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மூன்றாம் கட்ட சோதனைகள் நிறைவடைந்திருப்பதாக கடந்த திங்கள்கிழமை தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.