இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தினால் இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 வருடங்கள் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நுரையீரல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தெற்காசியாவில் காற்றின் தரம்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வியாழக்கிழமை கலந்து கொண்ட கருத்தரங்கில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் காற்று மாசுக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்தால் இந்தியாவில் டெல்லி வாழ்மக்களின் ஆயுட்காலம் சராசரியாக 9.4 வருடங்கள் உயரக்கூடும் என விஞ்ஞானிகள் குறிப்பிடப்பட்டனர்.
"காற்று மாசுபாடு என்பது நாடுகளின் எல்லைகளை மதிக்காது. அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், முன்னணி தொழிலாளர்கள், ஊடகங்கள், மாணவர்கள் என அனைவராலும் முன்னெடுக்கப்படும் நிலையான நீண்டகால கவனம் தேவை.” எனக் கருத்தரங்கில் பங்கேற்ற விஞ்ஞானிகள் வலியுறுத்தினர்.
இதேபோல், உலக சுகாதார அமைப்பின் காற்று மாசுபாட்டின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்தால் பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 2.8 ஆண்டுகள் மற்றும் 4.6 ஆண்டுகள் வரை உயரக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
மக்கள் நல்வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் எல்லைகளை மறந்து செயல்பட முன்வர வேண்டும் என கருத்தரங்கின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.