பெய்தாவ் 3 எனும் உலகளாவிய வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பின் தொடக்க விழா 31ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன விண்வெளிப்பயணத் துறைக்கும் அறிவியல் தொழில் நுட்பத் துறைக்கும் இவ்வமைப்பின் வெற்றி மாபெரும் சாதனையாகும். தவிரவும், உலகப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் இது வலுவான அறிவியல் தொழில் நுட்ப ஆதாரமாக விளங்கி புதிய வளர்ச்சிச் சக்தியை வழங்குவது உறுதி.
இவ்வமைப்பு, சீனா, ஆசிய பசிபிக் மற்றும் உலகிற்குச் சேவை வழங்குதல் என்னும் மூன்று கட்ட குறிக்கோள்களுடன் 26 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் கட்டிமுடிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷியாவின் கிரோனஸ், ஐரோப்பாவின் கலிலியோ ஆகியவற்றுக்கு அடுத்து உலகில் 4ஆவது மிகப் பெரிய புவியிடங்காட்டி அமைப்பாக இது திகழ்கின்றது. தகவல் தொடர்பு, வழிகாட்டல் ஆகிய சேவைகளை ஒன்றிணைப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
உலகளவில் இது 5 மீட்டருக்குள்ளான வேறுபாடுடன் இடங்காட்டி சேவையை வழங்கும். நிலையான நிலைமையில் இதன் மிகக் குறைந்த பிழை விளிம்பு ஒரு சென்டிமீட்டர் மட்டுமே ஆகும். தவிரவும், பெய்தாவ் அமைப்பின் மூலம், 10 நானோ வினாடிகளுக்குள் நேர ஒளிப்பரப்பு உலகில் மிகத் துல்லியமாக உள்ளது. நிதி, மின்னாற்றல், தகவல் தொடர்பு முதலிய துறைகளுக்கு இந்தத் துல்லியமான நேர ஒளிபரப்பு மிக முக்கியமானதாகும்.
உலகப் பொருளாதாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பெய்தாவ் அமைப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களுடன் சேர்ந்து பொருளாதாரத்துறை மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.
இதுவரை உலகளவில் 50 விழுக்காட்டுக்கும் மேலான நாடுகள் பெய்தாவ் அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெய்தாவ் அமைப்பு உள்ளிட்ட தரமான அறிவியல் சாதனைகளைச் சீனா உலக நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு வருவதன் மூலம் மனித குலத்தின் இனிமையான எதிர்காலத்துக்காக சேர்ந்து பாடுபட சீனா விரும்புகின்றது.
தகவல், சீன ஊடகக் குழுமம்