வெலிங்கடன்: கரோனா பேரிடரை மிகக் கச்சிதமாகக் கையாண்டு, அதில் வெற்றி பெற்றுள்ளது நியூ சிலாந்து. இங்கு கடந்த 17 நாள்களாக ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை.
கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் இன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு, தொடர்ந்து கரோனா பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில், அரசு எடுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், திங்கள்கிழமை நிலவரப்படி, நியூ சிலாந்தில் கடந்த 17 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கையாக நியூ சிலாந்து நாட்டின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு, குடிமக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
நியூ சிலாந்து நாட்டில் இதுவரை 1,500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.