ஒஸ்லோ: நார்வே மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நார்வே தலைநகர் ஒஸ்லோவிற்கு மேற்கே அமைந்துள்ள சிறு நகரம் பேரம். இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிலிப் மன்ஷாஸ் (22) என்னும் இளைஞன், கையில் துப்பாக்கியுடன், அங்கு அமைந்துள்ள அல்-நூர் இஸ்லாமிய மையத்திற்குள் புகுந்து, கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் துவங்கினான். அவன் கையில் துபாக்கி மற்றும் வெடி மருந்துகள் இருந்தபோதும் அஞ்சாமல், அங்கு பிரார்த்தனைக்கு வந்திருந்த முகம்மது ரபிக் (65) என்னும் ஓய்வு பெற்ற பாகிஸ்தானிய விமானப்படை வீரர் அவனை பாய்ந்து மடக்கினார். இதன்காரணமாக யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படாமல் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இது ஒரு அடிப்படை வலதுசாரித் தீவிரவாத செயல்பாடு என்றும், பிலிப் மசூதிக்கு புறப்படும் முன்பு வீட்டில் தனது 17 வயது தங்கையை சுட்டுக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
அத்துடன் பிலிப் அதே ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது தாக்குதல் நடத்திய பிரெண்டன் டாரண்ட்டை, தனது செயலுக்கு முன்மாதிரியாக கொண்டதும் தெரிய வந்தது.
இந்நிலையில் விசாரனை முடிவுற்ற நிலையில் பிலிப்புக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது.