ஜகார்த்தா: இந்தோனேசியாவில் மெராபி எரிமலைச் சீறத் துவங்கியிருப்பதால், அப்பகுதியில் பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தோனேசியாவின் தேசிய எரிமலை ஆராய்ச்சி நிலையச் செய்திகளை மேற்கோள் காட்டி, சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 2,930 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த எரிமலையானது ஞாயிறன்று எரிமலைக் குழம்புகளை வெளியேற்றி சீறத் துவங்கியுள்ளது. அதிலிருந்து வெளியான சாம்பல் புகை மண்டலமானது வானத்தில் 6 கிலோமீட்டர் உயரத்திற்கு பரவியுள்ளது. இதையடுத்து அருகே வாழும் மக்கள் அது அமைந்துள்ள இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழையக் கூடாதென்று தடை விதிகபட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் விமானங்கள் எதுவும் பறக்க கூடாதென்று சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எரிமலையானது கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி எரிமலைக்குழம்பை சீறி வெளித்தள்ளியபோது, சுமார் 3 கிலோமீட்டர் உயரத்திற்கு வானத்தில் சாம்பல் புகை பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.