டாக்கா: வங்கதேசத்தில் படகு ஒன்று மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியாகினர்.
திங்களன்று வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் பகுதியில் இருந்து தலைநகர் டாக்காவிற்கு ‘மார்னிங் பேர்ட்’ என்னும் பெயர் கொண்ட படகு சுமார் 100 பேருக்கு மேல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது காலை 09.30 மணியளவில் சதார்கட் முனையம் பகுதியில் ‘மொயூர்-2‘ என்னும் பெயர் கொண்ட மற்றொரு படகானது மார்னிங் பேர்ட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மார்னிங் பேர்ட் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 19 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 30 பேரின் சடலங்களை மீட்டனர்.
வங்கதேச உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆணைய அதிகாரிகள், மொயூர்-2 படகைக் கைப்பற்றிய போதிலும் படகின் கேப்டன் உள்ளிட்ட முக்கிய ஊழியர்கள் தப்பிவிட்டனர்.
விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த நால்வர் குழு ஒன்றை ஆணையம் நியமித்துள்ளது.