பிரிட்டனில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், லண்டன் டாக்லேண்ட் பகுதியில் உள்ள எக்ஸெல் சென்டர்(ExCeL Centre) தற்போது தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு 'நைட்டிங்கேல் மருத்துவமனை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், 4000 முதல் 5000 படுக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பிற துறைகளில் உள்ள ஊழியர்கள் பலருக்கு பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவுகின்றனர். அதேபோன்று தனியார் ஆம்புலன்ஸ்களும் அரசுடன் கைகோர்த்துள்ளன.
இதேபோன்று பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ ஆகிய நகரங்களிலும் தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உதவுவதற்காகத் தேசிய நல்வாழ்வு சேவை (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) தொண்டர் படையொன்றை 'மக்கள் ராணுவம்' என்ற பெயரில் அமைத்திருக்கிறது.
2.5 லட்சம் தொண்டர்கள் தேவை என்று பிரிட்டன் அரசு அழைப்பு விடுத்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.