மாஸ்கோவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியானார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது ரஷியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு, கடந்த ஒரு வாரமாக, தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 11,012 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாஸ்கோவில் உள்ள ஸ்பாசோகுகோட்ஸ்கி மருத்துவமனையில் சுமார் 700க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்த தளத்தில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.